Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

காற்றாலைகளுக்காக ஆக்கிரமிக்கப்படும் நீர் நிலைகள்

ஆண்டிபட்டி பகுதியில் தனியார் காற்றாலைகள் பயன்பாட்டிற்காக கண்மாய், நீர் வரத்து ஓடைகள், வாய்க்கால் ஆகியவை ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர், கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி, ராமலிங்காபுரம், சித்தார்பட்டி, மரிக்குண்டு, எம்.சுப்புலாபுரம், திருமலாபுரம், ஆசாரிபட்டி, ரோசனப்பட்டி, பிச்சம்பட்டி உட்பட பல கிராமங்களில் 20 ஆண்டுக்கும் மேலாக தனியார் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்கின்றனர். ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் இப்பகுதியில் வீசும் தென்மேற்கு, வடகிழக்கு பருவக்காற்று காற்றாலை மின் உற்பத்திக்கு சாதகமாக இருப்பதால் தொழில் நாளுக்கு நாள் விரிவாக்கம் ஆகின்றது.

காற்றாலைகள் அமைக்க கடந்த காலங்களில் தனியார் இடங்கள் சர்வே செய்துதேவையான தரிசு நிலங்களை விலைக்கு வாங்கினர். இதனால் நிலத்தின் மதிப்பும் உயர்ந்தது. கடந்த சில மாதங்களாக தனியார் காற்றாலைகள் விரிவாக்கத்தில் கண்மாய், நீர் வரத்து ஓடை, பாசனக்கால்வாய், நெடுஞ்சாலை ஓரங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கண்டமனூர் புதுக்குளம் கண்மாய் நீர்த்தேக்க பகுதியில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்வதற்கான உயர் மின்னழுத்த கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:

காற்றாலைகளுக்காக நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு

கோட்டைச்சாமி கணேசபுரம், மாவட்ட தலைவர் தேனி,ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம்: ஆண்டிபட்டி தாலுகா, ராஜதானி, மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி, எட்டப்பராஜபுரம் தெப்பம்பட்டி, கோத்தலூத்து, கணவாய் பட்டி, கணேசபுரம், தெப்பம்பட்டி பகுதியில் உள்ள நீர்நிலை ஓடைகள், சிறு குளங்களில் காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்ல இரும்பிலான மின் கம்பங்கள் அமைக்கப்படுகிறது. ஓடையில் நீர் வரத்து காலங்களில் மின் கம்பங்களில் பாதிப்பு ஏற்பட்டால் பெரும் விபத்துக்கு வழி ஏற்படுத்தும். அரசின் திட்டங்களுக்கு கூட நீர்நிலைக்கான இடங்களை தேர்வு செய்வதில்லை. ஏற்கனவே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது. இந்நிலையில் நீர் நிலைகளுக்கான இடங்கள் தனியார் காற்றாலை நிர்வாகத்தால் புதிதாக ஆக்கிரமிப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நீர்தேக்க பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம்

கே.அங்குச்சாமி, கண்டமனூர், மாவட்ட செயலாளர், தமிழக நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குழு தேனி: கண்டமனூர் புதுக்குளம் கண்மாய் தற்போது கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக கண்மாய் தூர்வாரவில்லை. கண்மாயில் நீர்த்தேக்க இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடியும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் கண்மாய் நீர்த்தேக்கப் பகுதியில் தற்போது காற்றாலைக்கான உயர் அழுத்த மின் கோபுரம் 3 இடங்களில் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை மனுக்கள் அனுப்பப்பட்டு, விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மின் கோபுரங்கள், மின்கம்பங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்கள் விவசாயிகள் சங்கம் சார்பில் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

அன்பழகன், மாவட்ட இணை தலைவர்,ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் : தனியார் காற்றாலைகளுக்கு தேவையான இடங்களை விலைக்கு வாங்கி மின் கம்பங்கள் அமைக்க வேண்டும். அரசு இடத்தில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தங்கள் இஷ்டத்திற்கு மின் கம்பங்களை அமைத்துள்ளனர். அரசுக்கு சொந்தமான இடங்களில் மின் கம்பங்கள் அமைக்க ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் முழு தகவல்கள் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட வேண்டும்.

விவசாயத்தை மேம்படுத்தும் திட்டம் தேவை

தீர்வு: மானாவாரி இறவை பாசன விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட ஆண்டிபட்டியில் நீர்நிலைகளை மேம்படுத்த விவசாயிகள் தொடர்ந்து போராடுகின்றனர். தொழில் துறைக்கான வாய்ப்புகளும் இப்பகுதியில் இல்லை. இந்நிலையில் இருக்கும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்கவும், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் அரசு முன் வரவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *