Wednesday, June 4, 2025
இந்தியா

சுழற்றி வீசிய புழுதிப்புயல்; தரையிறங்க முடியாமல் தவித்த இண்டிகோ விமானம்

டில்லியில் வீசிய புழுதி புயல் காரணமாக இண்டிகோ விமானம் தரையிரங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. இது தொடர்பாக பயணி ஒருவர் எடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே தலைநகர் டில்லியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. புழுதிப்புயல் மற்றும் கனமழை என மாறுபட்ட வானிலையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ராய்ப்பூரில் இருந்து டில்லிக்கு இண்டிகோ விமானம் ஒன்று நேற்று மாலை புறப்பட்டு சென்றது. டில்லி விமான நிலையத்தை நெருங்கிய போது, புழுதிப்புயல் வீசியது. இதனால், விமான நிலையத்தில் திட்டமிட்டபடி தரையறக்க முடியாமல், வானிலை வட்டமடித்தது.

இதனிடையே, விமானம் வானில் வட்டமடித்த போது, விமானத்தின் உள்ளே இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் இருப்பதால், வானிலை சீரான பிறகே, விமானம் தரையிறக்கப்படும் என்று விமானி அறிவித்தார். இதனால், பயணிகள் பதறிப் போகினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர், விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தின் உதவியுடன் இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

கடந்த மே 23ம் தேதி டில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானம், ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டு, பிறகு விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *