பார்லி., சிறப்பு கூட்டம் நடத்த பிரதமருக்கு ராகுல் எம்.பி., கடிதம்
‘போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., – எம்.பி.,யுமான ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய சூழலில், போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை வெளியானது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து, நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ‘மாலை 5:00 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது’ என, அறிவித்தார்.
இந்நிலையில், போர் தொடர்பாகவும், அமெரிக்க அதிபரின் தலையீடு குறித்தும் விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் எழுதிய கடிதம்:
பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் ஒருமனதான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் மற்றும் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை பற்றி விவாதிப்பது மிகவும் முக்கியம்.
இது வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், நம் கூட்டுத்தீர்மானத்தை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் தீவிரமாகவும், விரைவாகவும் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கருத்தை வலியுறுத்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.