சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை. திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை தலைமை செயலகத்தில், இன்று (ஜூலை 09) சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.
ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் ஸ்டாலின் உறுதி
படுகொலை செய்யப்பட்ட,பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
”கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை நிச்சயம் கிடைக்கும்” என ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.