Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டி கூட்டுறவு பட்டய பயிற்சி படிக்கும் பகுதி நேர மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூட்டுறவு பட்டய பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு வருட கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

வாரத்தில் சனி ஞாயிறு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வகுப்புகளில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பட்டய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளின் வருகை பதிவேடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயோ மெட்ரிக் முறையில் மாற்றப்பட்டது. கணினி முறையில் மாற்றப்பட்ட வருகை பதிவேடை பராமரிக்க கூட்டுறவு பட்டய பயிற்சி நிலையத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் வருகை பதிவேடு முறையாக பராமரிக்கப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டுறவு பட்டய பயிற்சியில் படித்து வரும் பகுதி நேர மாணவர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரிக்கப்படவில்லை என்று கூறி அங்கு படிக்கும் மாணவ மாணவிகளிடம் அபராதம் வசூலிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

கூட்டுறவு பட்டய பயிற்சி மையத்தின் இந்த செயல்பாட்டால் அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வருகை பதிவேடு முறையாக பராமரிக்கப்படாமல் மாணவ மாணவிகளிடம் அபராதம் வசூலிக்க முயற்சிப்பதை கண்டித்தும், கூட்டுறவு பட்டய பயிற்சி தேர்வு செமஸ்டர் முறையில் நடத்தும் முறையை கைவிடக் கோரியும், பட்டய பயிற்சி மையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த கூட்டுறவு பட்டய பயிற்சி மைய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவ மாணவிகள் தங்களின் கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுக்கும் படி அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதற்கு சம்மதித்த மாணவ மாணவிகள் தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் இனி வரும் நாட்களில் போராட்டத்தை தீவிர படுத்த முடிவு செய்துள்ளதாக கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *