அ.தி.மு.க., நகர செயலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
தேனி மாவட்டம், சின்னமனுார் அ.தி.மு.க., நகர செயலர் பிச்சை கனி, 39. இவரது வீடு சின்னமனுார் — கம்பம் மெயின் ரோட்டில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு மனைவி, குழந்தைகளுடன் அவர் துாங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 1:45 மணிக்கு டூ – வீலரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டின் காம்பவுண்டிற்குள் இரு பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
அவை பலத்த சத்தத்துடன் வெடித்தன. வாட்ச்மேன் எழுந்து சத்தம் எழுப்பியவுடன் டூ – வீலரில் வந்தவர்கள் தப்பினர்.
தேனி எஸ்.பி., சிவபிரசாத் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். சிதறி கிடந்த பாட்டில் துகள்கள், திரிகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் எந்த சேதமும் இல்லை. சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர். கம்பத்தில், செப்., 19ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பிச்சை கனிக்கும், அ.தி.மு.க., பிரமுகர் வெங்கடேசனுக்கும் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் புகார் செய்து, கம்பம் போலீசில் விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே, பெட்ரோல் குண்டு வீச்சு உட்கட்சி பூசலால் நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என விசாரணை நடக்கிறது.
பிச்சை கனி வீட்டிற்கு வந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அவரிடம் கேட்டறிந்தார்.