பெரியகுளம் பெருமாள் கோயிலில் பவித்திர உற்சவம்
பெரியகுளம், நவ. 29: பொதுவாக கோயிலில் ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்யவும், உலக நன்மை வேண்டியும் அனைத்து வைணவ தலங்களிலும் பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. குறிப்பாக திருமலை திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட திவ்ய தேசங்களில் பவித்ர உற்சவம் முக்கியமான உற்சவமாகும். கும்பாபிஷேகத்தில் செய்யக்கூடிய அனைத்து சடங்குகளும், பூஜைகளும் பவித்ர உற்சவத்தில் செய்யப்படும்.
இந்நிலையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வராக நதியின் தென்கரையில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று முன் தினம் பவித்திர உற்சவ விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு அமுத நெய்வேத்தியம் செய்யப்பட்டது. இதில் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.