Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை – வைகை அணையில் தண்ணீர் திறப்பு:

ஆண்டிபட்டி: கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வைகை ஆற்றின் கரையோரம் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன நிலங்களுக்காக நவ. 10 முதல் வைகை ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டு தற்போதும் தொடர்கிறது.

பூர்வீக பாசனப்பகுதி 3ல் உள்ள நிலங்களுக்கு 1830 மில்லியன் கன அடியும், பூர்வீக பாசனப் பகுதி 1ல் உள்ள நிலங்களுக்கு 418 மில்லியன் கன அடியும் இதுவரை வெளியேற்றப்பட்ட நிலையில் பூர்வீக பாசனப் பகுதி 2ல் உள்ள நிலங்களுக்கு நேற்று முதல் டிச. 8 வரை 752 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.

வைகை அணை நீர்வளத்துறையினர் கூறியதாவது: வைகை பூர்வீக பாசனப்பகுதி 2ல் உள்ள நிலங்களுக்கு நேற்று காலை வினாடிக்கு 1500 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது.

சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக நேற்று முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

தற்போது வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக வினாடிக்கு 2000 கன அடிக்கும் அதிகமாக நீர் செல்வதால் கரையோரங்களில் உள்ள பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

அணை நீர்மட்டம் 56.82 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). நீர்வரத்து வினாடிக்கு 612 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி — சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *