பல்லுயிர் பெருக்கத்திற்கு குறுங்காடுகள் அமைக்கும் பணிகள் தீவிரம்
‘சுற்றுச்சூழலை பாதுகாக்க ‘மரங்கன்றுகள் வளர்க்க வேண்டியதன் அவசியம்’, குறுங்காடுகள் அமைப்பது, சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நகரங்களிலும், கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.’ என, கம்பம் பகுதியில் உள்ள பல தொண்டு நிறுவனங்கள் நடத்தி களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இந்த தொண்டு நிறுவனங்கள் கம்பம் பள்ளத்தாக்கு, கம்பம் பசுமை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.
கம்பம் நகரத்திற்குள் மரங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை. கிடைக்கும் இடங்களில் மரங்கன்றுகள் வைத்து வளர்க்க இப்போது தான் பசுமை இயக்கங்கள் ஆரம்பித்து உள்ளன. உத்தமபாளையத்தை சேர்ந்த ‘நன்செய் அறக்கட்டளை’, ராயப்பன்பட்டியை சேர்த்த, ‘ஆலிழை பசுமை இயக்கம்’ வழிகாட்டிகளாக இருந்து செயல்படுத்தி வருகின்றனர்.
கம்பத்தில் வரதராஜபுரம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க் வீதி, நாட்டுக்கல், ஏகலூத்து ரோடு, சி.எம்.எஸ்., நகர், கம்பமெட்டு ரோடு, கிராமச் சாவடி தெரு, மெயின் ரோடு, கொண்டித்தொழு வீதி பல்வேறு தெருட்களில் பெயருக்கு கூட மரங்கள் இல்லை.
இந்த பகுதிகளில் பசுமை இயக்கம் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறது. காந்தி நகர், நந்தகோபாலசாமி நகர், யாழினி நகர் என விரிவாக்க பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே மரங்கள் வளர்ந்துள்ளன.
அதுவும் குறைவாகவே உள்ளன. அனைத்து வீதிகளிலும் மரங்கன்றுகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரப்பநாயக்கன் குளக்கரைகளில் பனை விதை நடவிற்கு நீர்வளத்துறை அனுமதி தரவில்லை. நகரத்திற்குள் உள்ள புறம்போக்கு இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் குறுங்காடு ஏற்படுத்த முயற்சி நடந்து வருகின்றன.
குறுங்காடு பணி தீவிரம்
செல்வக்குமார், நன்செய் அறக்கட்டளை, கம்பம்: எங்கள் அமைப்பின் சார்பில் இதுவரை 65 ஆயிரம் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் நடவு செய்து உள்ளோம். கலெக்டர் அலுவலக வளாகம், உத்தமபாளையம் கல்லுாரிகளில் குறுங்காடு அமைத்துள்ளோம். குறுங்காடு அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கான நல்ல சூழ்நிலை ஏற்படுகிறது. பறவைகள் விரும்பி உண்ணும் நாவல், அத்தி, கொடிக்கா புளி மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறோம். பறவைகள் தங்கள் எச்சத்தின் மூலம் பல மரக்கன்றுகளை உருவாக்கும். குறுங்காடுகள் பறவைகள் இன உற்பத்திற்கு உதவியாக இருக்கும். எனவே கம்பம் நகரை ஒட்டிய பகுதிகளில் குறுங்கா
அமைக்க முயற்சிகள் செய்து வருகிறோம். நகராட்சி முன்வந்து இடம் தந்தால் கம்பத்தை பசுமை போர்வைக்குள் கொண்டு வரலாம். இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன., என்றார்.
பள்ளிகளில் நர்சரி
மணிமாறன், தலைவர், ஆலிழை பசுமை இயக்கம் : 2012ல் துவக்கப்பட்ட எங்கள் இயக்கம் சார்பில் இதுவரை ஒரு லட்சம் மரக்கன்றுகள் வரை, நடவு செய்துள்ளோம். மரக்கன்றுகளை நட்டு விட்டு அப்படியே விட்டு செல்வது இல்லை. தொடர்ந்து அதை பராமரிப்பதும் முக்கிய கடமையாகும். மேலும் எங்கள் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில் பங்கேற்பவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம்.மரக்கன்றுகள் வளர்ப்பதில் பொது மக்களிடம் மாணவக் குழுக்கள் மூலம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது கோகிலாபுரம் கண்மாய் கரையில் குறுங்காடு ஏற்படுத்தி பராமரிக்கிறோம். கம்பத்தில் அடர் வனம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இடம் தேர்வில் தடங்கல்கள் உள்ளன. பல்லுயிர் பெருக்கம் ஏற்பட குறுங்காடுகள் உதவும். சாலை விரிவாக்கம் என்று மரங்களை வெட்டி சாய்க்கின்றனர். எனவே மாவட்டம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு அடர் வனம் அமைக்கும் முயற்சி தீவிரப்படுத்த உள்ளோம். அனைத்து பள்ளி வளாகங்களிலும் மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் உள்ளடக்கிய ‘நர்சரி’ ஒன்றை உருவாக்க அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வரவேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை துவங்க உள்ளோம்., என்றார்.