சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு ஐந்தாண்டு சிறை
தேனி: ஆண்டிபட்டி தாலுகாவில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவர் வேலுச்சாமிக்கு 58, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆண்டிபட்டி தாலுகாவை சேர்ந்த 10 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். தினமும் நடந்து பள்ளி சென்று மாலையில் வீட்டிற்கு வருவது வழக்கம். 2023 ஜனவரியில் ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை அப்பகுதிக்கு வந்த முதியவர் துரத்தினார். சிறுமியின் பெற்றோர் பார்ப்பதற்குள் முதியவர் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில், அவர் அனுப்பபட்டியை சேர்ந்த வேலுச்சாமி என தெரிந்தது. இதனால் அவரை கண்டித்தனர். 2023 ஜூலை 12ல் காலையில் பள்ளிக்கு சென்ற சிறுமியை முதியவர் வேலுச்சாமி, வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்தார். சிறுமி பள்ளி தலைமை ஆசிரியை,பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்து குற்றவாளி வேலுச்சாமிக்கு ஐந்தாண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.