வரத்து, உபரிநீர் கால்வாய்கள் இன்றி கரைகள் உடையும் அபாயம்
கம்பம்: காமயகவுண்டன்பட்டி கேசவபுரம் கண்மாய்க்கு வரத்து வாய்கால், உபரிநீர் வெளியேறும் வாய்க்கால் இல்லாததால் கண்மாயில் நீர் நிரம்பினால் கரை உடையும் அபாயத்தில் உள்ளது என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
காமயகவுண்டன்பட்டிக்கும், நாராயணத்தேவன்பட்டிக்கும் இடையே 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது கேசவபுரம் கண்மாய். 20 ஆண்டுகளுக்கு முன்பே இக் கண்மாயின் ஒரு பகுதியில் சுமார் 10 ஏக்கர் ஆக்கிரமித்து பலன் தரும் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமய கவுண்டன்பட்டி, அணைப்பட்டி வரை உள்ள நூற்றுக்கணக்கான விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர இக் கண்மாய் ஆதாரமாக உள்ளது. மேலும் கோடை காலங்களில் கால்நடைகளுக்கு குடிநீர் தேவையை போக்குகிறது. மேகமலையில் பெய்யும் மழை நீர் கூத்தனாட்சி வாய்க்கால் வழியாக இக் கண்மாய்க்கு வருகிறது. கூத்தனாட்சி வாய்க்கால் வழியாக தண்ணீர் வரும் 2 கி.மீ. தூர வரத்து வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் தண்ணீர் வர வழியில்லாத நிலை உள்ளது. சமீபத்தில் விவசாயிகள் சொந்த பணம் செலவழித்து வாய்க்காலில் இருந்த செடி கொடிகளை அகற்றினார்கள். ரூ.40 லட்சத்தில் கண்மாய் பராமரிப்பு பணிகள் நடந்தது. தண்ணீரை வெளியேற்றுவதற்கான வாய்க்கால் அமைக்க வில்லை. வாய்க்கால் செல்லும் வழியில் உள்ள நிலங்களில் சர்வே செய்து நிலத்தை எடுத்து வாய்க்கால் அமைத்துக் கொள்ளுங்கள் என விவசாயிகள் கூறிய பின்பும், அதிகாரிகள் அந்த பணியை மேற்கொள்ளாததால், தண்ணீர் வெளியே செல்ல வழியில்லை. இதனால் கண்மாய் குப்பைகளை கொட்டவும், தென்னை கழிவுகளை கொட்டும் இடமாக மாறி விட்டது.
நீர் வரத்து கால்வாய் துார்வார வேண்டும்
ரவீந்திரன், விவசாயி, காமயகவுண்டன்பட்டி : எனது தலைமையில் தான் ரூ.40 லட்சத்தில் கண்மாய் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. ஆனால் முழுமையாக பணிகள் செய்ய முடியவில்லை .பல இடையூறுகள் இருந்தது. தற்போது தண்ணீர் வரும்வரத்து வாய்க்கால் துார் வார வேண்டும். தண்ணீர் வெளியே செல்ல மடை உள்ளது. ஆனால் வாய்க்கால் சர்வே செய்யாததால் உபரி நீர் வெளியே செல்ல வழியில்லாமல் உள்ளது.
உபரி நீர் வெளியேறினால் கிணறுகள் பயன்பெறும்
பார்த்திபன், விவசாயி, காமயகவுண்டன் பட்டி: இந்த கண்மாய் இப்பகுதி விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது. ஆனால் வரத்து வாய்க்கால் தூர்ந்து போனதால், தண்ணீர் வரத்து இல்லை. கண்மாய் முழு அளவில் நிரம்பினால் தோட்ட கிணறுகளின் நீர் மட்டம் குறையாமல் இருக்கும். அதே போல நிரம்பும் போது, உபரி தண்ணீரை
வெளியேற்ற வாய்க்கால் அமைக்க வேண்டும். மீண்டும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் கண்மாயை ஒப்படைக்க வேண்டும்.
கண்மாய் பராமரிப்பு தேவை
குமரேசன், புரவு காவல் நிர்வாகி: விவசாயிகளிடம் பணம் வசூலித்து தண்ணீர் வரும் கூத்தனாட்சி வாய்க்காலை பராமரிப்பு செய்தோம். ஆனால் முழுமையாக செய்ய முடியவில்லை. கண்மாய்க்கு மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வரும் வரத்து வாய்க்காலை தூர் வார வேண்டும். உபரி நீரை கடத்தவும் வாய்க்கால் அமைக்க வேண்டும். மழை காலங்களில் கண்மாய் நிரம்பினால் கரைகள் உடையும் அபாயம் உள்ளது. ஆயிரம் கிணறுகளுக்கு மேல் நிலத்தடி நீர் உயர பயன்படும் இந்த கண்மாயை தூர்வாரி பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வளத்துறையின் மஞ்சளாறு டிவிசன் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிகாரிகள் இப்படியொரு கண்மாய் இருப்பதையே மறந்து விட்டனர் என்பது வேதனையாக உள்ளது.