போடி பஸ் நிலையத்தில் முதியவர் சடலம் மீட்பு
போடி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அத்தவதூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (86). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். சத்தியமூர்த்தி தனது மனைவியுடன் கடந்த 15 ஆண்டுகளாக போடியில் வசித்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தம்பதியர் மீண்டும் திருச்சிக்கு சென்று தங்கினர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சத்தியமூர்த்தியின் மனைவி இறந்துவிட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தனது அக்காள் வீட்டிற்கு சத்தியமூர்த்தி சென்றார்.
அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு போடிக்கு புறப்பட்டு வந்தார். இந்நிலையில் போடி பஸ் நிலைத்தில் சத்தியமூர்த்தி இறந்து கிடந்தார். போடி நகர் போலீசார் அவரது சடலத்தை மீட்டு தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் வெங்கட்ராமன்(48) போடி நகர் காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ விஜயராமன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.