ஆண்டிபட்டியில் மும்முனை மின் வினியோக நேரம் குறைவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மும்முனை மின்சார வினியோக நேரம் குறைவாக இருப்பதால் விவசாயப் பணிகள், குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கிணற்று பாசனம் போர்வெல் மூலம் காய்கறிகள், பழங்கள், பூக்கள், தென்னை, விவசாயம் தொடர்கிறது. மும்முனை மின்சாரம் மூலம் மோட்டாரை இயக்கினால் மட்டுமே பல ஏக்கர் நிலங்களில் பாசன வசதி மேற்கொள்ள முடியும். ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஏத்தக்கோவில், சித்தைய கவுண்டன்பட்டி, அனுப்பப்பட்டி, மறவபட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை உட்பட பல கிராமங்களில் தினமும் 4 முதல் 6 மணிநேரம் மட்டுமே மும்முனை மின் வினியோகம் உள்ளது. குறைவான நேரம் கிடைக்கும் மும்முனை மின்சாரம் மூலம் விவசாய பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் பலரும் தவிக்கின்றனர். ஆயில் இன்ஜின் பயன்படுத்த கூடுதல் செலவாகிறது.
குடிநீர் வினியோகத்தில் சிக்கல்:
பொதுமக்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக ஆண்டிபட்டி பகுதியில் வறட்சியின் தாக்கம் குறைந்துள்ளது. நிலத்தடி நீர் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பலரும் ஆர்வத்துடன் விவசாய பணிகளை தொடர்கின்றனர். கிணறுகள், போர்வெல்களில் போதுமான நீர் சுரப்பு இருந்தும் மும்முனை மின் வினியோக நேரம் குறைவால் நிலங்களில் முழுமையாக நீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் வளமான மண், நீர்வளம் இருந்தும் விவசாய உற்பத்தியில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களுக்கும் பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டம், வள்ளல் நதி கூட்டு குடிநீர் திட்டம், ஆண்டிபட்டி – சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் உள்ளது. மும்முனை மின்வினியோக நேரம் குறைவாக இருப்பதால் மேல்நிலைத்தொட்டிகளில் குடிநீர்ஏற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீரை பகிர்ந்தளிக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியம் திணறுகிறது. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு மும்முனை மின் வினியோக நேரத்தை அதிகப்படுத்த மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.