மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டி 10 மாணவர்கள் தங்கம் வென்று சாதனை
மாநில அளவிலான ‘கிக் பாக்சிங்’ போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் ஆண்டிபட்டி கன்னியப்பபிள்ளைபட்டி விளையாட்டு மையத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் ‘கிக் பாக்சிங் அசோசியேசன்’ தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார். செயலாளர் மற்றும் பயிற்சியாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். பயிற்சியாளர் கூறியதாவது: செங்கல்பட்டு மேலக்கோட்டையூரில் மே மாதம் 9, 10, 11 தேதிகளில் நடந்த மாநில ‘கிக் பாக்சிங்’ போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஜூனியர் பிரிவில் யாழினி, இந்துஜா, வசுமதி, ரிகாஷினி, நித்திஷ் குமார் ஆகியோரும், சீனியர் பிரிவில் ரஞ்சிதா, சபரீஷ், விக்னேஸ்வரன், கிரிதேவ், மாரிமுத்து ஆகியோரும் தங்கப்பதக்கம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் ஜீவிதன், சேதுராமன், முத்துகாவியா, சதீஷ், வெங்கடேஷ் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், சிவகணேஷ், சச்சின், சின்னத்துரை, கிருபா ஸ்ரீ, மனோகரன் ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர். தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்கள் ஜூலை 16 முதல் 20 வரை சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறும் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை பயிற்சியாளர்கள் ஜெயவேல், பொன்னீஸ்வரி, ஆனந்த வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.