மூணாறு ஊராட்சி தலைவராக காங்., மணிமொழி தேர்வு
மூணாறு ஊராட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12ம் வார்டு உறுப்பினர் மணிமொழி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மூணாறு ஊராட்சி காங்கிரஸ் வசம் உள்ளது. 21 வார்டுகளை கொண்ட ஊராட்சியில், இரண்டு உறுப்பினர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின்படி தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்தது. தற்போது காங்., கூட்டணி சார்பில் 11, இடது சாரி கூட்டணி 8 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர்.
காங்., கட்சியைச் சேர்ந்த 3ம் வார்டு உறுப்பினர் தீபா 2024 பிப்.15ல் தலைவரான நிலையில் 2025 மார்ச் 29ல் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் தலையிட்ட தேர்தல் கமிஷன் தீபா தலைவராக தொடரலாம் என உத்தரவிட்டதால், அவர் ஏப்.24ல் மீண்டும் தலைவரானார். அவர் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி ஏப்.28ல் தலைவர் பொறுப்பை மீண்டும் ராஜினாமா செய்தார்.
தேர்வு: இந்நிலையில் தாலுகா புள்ளியியல் துறை அதிகாரி ஜிஜின் முன்னிலையில் நேற்று தலைவர் தேர்வு நடந்தது. காங்., சார்பில் 12ம் வார்டு உறுப்பினர் மணிமொழி, இடது சாரி கூட்டணி சார்பில் 7ம் வார்டு உறுப்பினர் ஜோதி ஆகியோர் போட்டியிட்டனர். அதில் 11 ஓட்டுகள் பெற்று மணிமொழி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த 2020 டிச.1 முதல் 2021 டிச.10 வரை தலைவராக பொறுப்பு வகித்த நிலையில், தற்போது மீண்டும் தலைவரானார் என்பது குறிப்பிடதக்கது.