Friday, June 6, 2025
மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டி பகுதியில் தினமும் அவதிக்குள்ளாகும் அவலம் : ரயில்வே சுரங்கப் பாலத்தில் தேங்கும் மழை நீரால் பரிதவிப்பு

ஆண்டிபட்டி : மதுரை — போடி அகல ரயில் பாதையில் ஆண்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்ட சுரங்க பாலங்களில் தேங்கும் மழை நீர், கழிவு நீரால் பொதுமக்கள் தினமும் பரிதவிக்கின்றனர்.

ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 80 சதவீத பொதுமக்கள் அன்றாடம் ரயில்வே சுரங்க பாலங்களை கடந்து செல்கின்றனர். ஆண்டிபட்டி -மேக்கிழார்பட்டி ரோடு, ஏத்தக்கோயில் ரோடு, தெப்பம்பட்டி ரோடு உட்பட 6 இடங்களில் அமைக்கப்பட்ட சுரங்க பாலங்களில் லேசான மழை பெய்தாலும் பாலங்களில் மழை நீர் தேங்கி விடுகிறது. ஒவ்வொரு முறையும் தேங்கிய நீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்த பல மணி நேரமாகிறது.

சுரங்க பாலங்களை கடந்து செல்ல மாற்றுப்பாதையில் இல்லாததால் மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆண்டிபட்டி – ஏத்தக்கோயில் ரோட்டில் உள்ள சுரங்கப்பாலம் அருகே செல்லும் கழிவு நீர் ஓடையில் இருந்து கசியும் நீர், சுரங்க பாலத்தில் எப்போதும் தேங்கி விடுகிறது.

கழிவு நீரால் இப்பகுதியில் சுகாதார பாதிப்பு தொடர்கிறது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு முறை மோட்டார் மூலம் கழிவு நீரை வெளியேற்றினாலும் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் தேங்கி விடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க ரயில்வே நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை இல்லை. ரயில்வே சுரங்க பாலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:

சுரங்க பாலத்தை மூடி விட்டு ரயில்வே கேட் அமைக்க வேண்டும்

சண்முகம், வழக்கறிஞர் ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி — ஏத்தக்கோயில் ரோட்டில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தை கடந்து ஆண்டிபட்டி கோர்ட், அரசு, தனியார் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் செயல்படுகிறது. நகரின் விரிவாக்கம் பகுதியாகவும் உள்ளன.

தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தேங்கும் கழிவு நீரை கடந்த செல்லும்போது நோய் தொற்று ஏற்படுகிறது. கழிவு நீருடன் சகதியும் இருப்பதால் டூவீலரில் செல்வோர் வழுக்கி விழுகின்றனர். மாணவிகள் அன்றாடம் மேம்பாலத்தில் ரயில்வே லைனை கடந்து செல்வது ஆபத்தாக உள்ளது.

ஆண்டிபட்டி மக்களுக்கு அன்றாடம் பாதிப்பு ஏற்படுத்தும் சுரங்க பாலங்களை மூடிவிட்டு மேம்பாலத்தில் ரயில்வே கேட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே கேட் அமைப்பதால் ரயில் கடந்து செல்லும்போது சில நிமிடங்கள் மட்டுமே காத்திருக்க வேண்டும். சுரங்க பாலத்தில் தேங்கும் மழை நீர் கழிவு நீரால் பல மணி நேரம் பாதிக்கப்படுகிறோம்.

நடை பாதை வசதி இல்லை

எஸ்.கோவர்த்தனன், ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி பகுதியில் ரயில்வே சுரங்க பாலங்கள் சமூக அக்கறையுடன் அமைக்கவில்லை. இரு வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்க பாலம் அமைத்து விட்டனர். நடைபாதை அமைக்கவில்லை.

சுரங்க பாலத்தில் முதியவர்கள், குழந்தைகள் நடந்து செல்ல முடியவில்லை. வாகன பெருக்கத்தால் பாதுகாப்பு இல்லை. நடைபாதை வசதி இல்லாத ரோட்டில் எந்த நம்பிக்கையில் செல்ல முடியும். ஆண்டிபட்டியில் 70 சதவீத மக்கள் இந்த ரயில்வே சுரங்க பாலத்தை பயன்படுத்துகின்றனர். சுரங்க பாலத்தில் தேங்கும் மண், தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து விடுவதால் தொடர்ந்து தேங்கும் நீர் கழிவுநீர் ஆகிறது. கழிவு நீர் ஓடையில் இருந்து கசியும் நீரும் அதனுடன் சேர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்டிபட்டி – தெப்பம்பட்டி ரோட்டில் வேலப்பர் கோயில் விழா காலங்களில் பொதுமக்களுக்கு நெருக்கடியால் பாதிப்பு அதிகமாகிறது. பொதுமக்களின் பாதிப்பை தவிர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

புதிய திட்டம்தான் தீர்வு

ரயில்வே சுரங்க பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைமேடை அமைக்க வேண்டும். மழைநீர் சுரங்க பாலத்தில் தேங்குவதை முன்கூட்டியே தடுக்க வேண்டும். நடந்து செல்லும் பொது மக்களுக்கு தனி பாதை ஏற்படுத்த வேண்டும். சுரங்க பாலத்தை அப்புறப்படுத்தி மேம்பாலத்தில் ரயில்வே கேட் அமைப்பதற்கான புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கொண்டு வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *