அகமலை விவசாயிகளை வெளியேற்றினால் போராட்டம்
தேனி அகமலை, வடக்குமலை அனுபவ விவசாயிகளை வனத்துறை வெளியேற்றினால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் ‘ என தேனியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வனத்துறையினர் விவசாயிகளுக்கு அதிக நெருக்கடி தருவது தொடர்கிறது.
வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை, வனத்துறை எப்படி உரிமை கொண்டாட முடியும். நிலத்தில் பயிர் செய்து, வரி செலுத்தி வந்த நிலையில் தற்போது காலி செய்ய சொல்வதும், கால்நடைகள் மேய்க்க தடை செய்யும் வனத்துறையை கண்டிக்கிறேன். அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு வருவாய்த்துறை பட்டா வழங்க வேண்டும். இந்நிலங்களில் வனத்துறை அத்துமீறி நுழையக்கூடாது.
அகமலை, அண்ணாநகரில் வீட்டுமனை பட்டா வழங்கி 40 ஆண்டுகளுக்கு பின் அவர்களை வெளியேற சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது. பட்டா கேட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் நானே தலைமை தாங்கி போராட்டம் நடத்துவேன்’, என்றார்