Wednesday, April 30, 2025
மாவட்ட செய்திகள்

பேரிடர் கால ரூ.2.45 கோடி நிதி… வீணாகலாமா; சின்னமனுார் தீயணைப்பு நிலையத்திற்கு இடம் தேவை

பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கி கொள்ளும் மனிதர்கள், பிற உயிரினங்களை காப்பாற்றும் மிகப் பெரிய பணியை தீயணைப்புத் துறையினர் செய்து வருகின்றனர். கம்பம், உத்தமபாளையம் நகரங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. சின்னமனுாரில் கடந்த 2021ல் தனியார் வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்படத் துவங்கியது.

இந்நிலையத்தின் கட்டுப்பாட்டு பகுதிகள் சின்னமனுார், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, காமாட்சி புரம், ஓடைப்பட்டி, தென்பழநி, சீப்பாலக்கோட்டை எரசை, மார்க்கையன்கோட்டை, குச்சனுார், அய்யம்பட்டி, புலிகுத்தி, சிந்தலச்சேரி என பட்டியல் நீள்கிறது. மிக முக்கியமாக மேகமலை பகுதியில் உள்ள 7 மலைக் கிராமங்களும் அடங்கும்.

சின்னமனுார் தீயணைப்பு நிலையத்தின் முக்கியத்துவத்தை கருதி மத்திய அரசின் பேரிடர் கால நிதியிலிருந்து ரூ.2 கோடியே 45 லட்சத்தை புதிய கட்டடம் கட்டவும், நவீன உபகரணங்கள் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

சின்னமனுார் வனத்துறை அலுவலகம் அருகில் முதலில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், ‘ஊரணி’ என அவ்விடத்தை வருவாய்த்துறை மறுத்துள்ளது. கிராமங்களில் இடம் தருவதாக கூறுகிறது. சின்னமனுார் நகரில் கட்டடம் கட்டினால்தான் மேற்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அவசர நேரத்தில் சென்று வர முடியும். கிராமங்களில் ஒதுக்கினால் அவசரத்திற்கு செல்வதில் சிரமங்கள் ஏற்படும் என தீயணைப்புத்துறை மறுத்துவிட்டது.

இதனால் அனுமதிக்கப்பட்ட நிதியை அரசு திரும்ப பெறும் சூழல் உருவாகி உள்ளது. கலெக்டர் ஷஜீவனா இப்பிரச்னையில் தலையிட்டு, தீயணைப்பத்துறைக்கு நகருக்குள் அரசு புறம்போக்கு நிலத்தை கண்டறிந்து, உடனடியாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *