கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்படுமா
15 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியும், அதற்கான நடவடிக்கைகள் துவங்கவில்லை
35 வயது முதல் 45 வயதுடைய பெண்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் தொற்றா நோய் பிரிவில் கர்ப்ப வாய் பரிசோதனைகள் செய்ய உத்தரவிட்டது. மத்திய சுகாதார அமைச்சகம் கர்ப்ப வாய், மார்பகம், ஒரல் புற்றுநோய் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தது.
ஆனால் சமீபமாக அரசு மருத்துவமனைகளில் இப் பரிசோதனை செய்வது குறைந்து விட்டது. 2023ல் தமிழகத்தில் 8534 பேர்களுக்கு கர்ப்ப வாய் புற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது.
2030 க்குள் 15 வயது பெண் குழந்தைகள் 90 சதவீதம் பேர்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த உலக சுகாதார நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை. சமீபத்தில் 15 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி போட மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 2014 ல் இருந்து 2023 வரை ஆண்டிற்கு ஆண்டு கர்ப்ப வாய் புற்றுநோய் அதிகரித்துள்ளது.
எனவே இப் பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் தீவிரப்படுத்தவும், 15 வயது பெண் குழந்தைகளுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.