23 மின் வழிப்பாதைகளை புனரமைக்க ரூ.50 கோடி; குடியிருப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கும்
தேனி மாவட்டத்தில் 23 மின் வழிப்பாதைகளை ( Feeder ) புனரமைக்க மின் பகிர்மான புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் வேளாண் மின் இணைப்பு, குடியிருப்புக்களுக்கான மின் இணைப்புகளும் ஒரே டிரான்ஸ்பார்மர் மூலம் வினியோகிக்கப்படுகிறது. வேளாண் மின் இணைப்புகளுக்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வினியோகம் இருக்கும். வீடுகளுக்கு 24 மணி நேரமும் சப்ளை இருக்க வேண்டும். ஒரே டிரான்ஸ்பார்மர் என்பதால் வேளாண் இணைப்புகளுக்கு சப்ளையை நிறுத்தும் போது, குடியிருப்புகளுக்கும் சப்ளையை நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதை தவிர்க்க மத்திய அரசு ஆர்.டி.எஸ்.எஸ் ( Revamped Service Sector Scheme ) என்ற திட்டத்தை அறிவித்தது. 2021 முதல் 2026 வரை 5 ஆண்டுகளுக்கான திட்டமாகும். இதில் மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 758 கோடி இந்த திட்டத்திற்கென மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பிரிபெய்டு ஸ்மார்ட் மீட்டர்கள் 20.46 கோடி மீட்டர்களும், பீடர்களுக்காக 1.98 கோடி மீட்டர்களும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிராம பகுதி டிரான்ஸ்பார்மர்களில் உள்ள வேளாண் மற்றும் குடியிருப்பு இணைப்புகளை தனித் தனியாக பிரித்து மின் சப்ளை வழங்கும் பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன் துவங்க ஆயத்தமான போது, தேர்தல் அறிவிப்பால் நிறுத்தப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் இந்த பணிகளை மேற்கொள்ள வாரியம் முன் வந்துள்ளது.
தனி மின்வழிப்பாதை
இது குறித்து மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, தேனி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனி மின் வழிப்பாதை ( Feeder ) இருக்கும். ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் 3 முதல் 5 பீடர்கள் வரை இருக்கும். மாவட்டத்தில் மொத்தம் 78 பீடர்கள் உள்ளன. முதற்கட்டமாக 23 பீடர்களை ரூ.50 கோடியில் புனரமைக்க நடவடிக்கைகள் துவங்கி உள்ளது. அதாவது மின்வழிப்பாதையில் வேளாண் மற்றும் குடியிருப்பு வினியோகம் தனித்தனியாக பிரிக்கப்படும். இதன் மூலம் குடியிருப்புகளுக்கு தடங்களின்றி சப்ளை கிடைக்கும் என்கின்றனர்.