ஏலக்காய் பறிப்பு தள்ளிப்போகிறது குவாதிமாலாவிலும் மகசூல் பாதிப்பு
கடும் வறட்சி, தொடர் மழை காரணமாக செடிகள் சேதம், அழுகல் நோய் காரணமாக ஏலக்காய் பறிப்பு தள்ளி போகிறது. குவாதிமாலா நாட்டிலும் ஏலக்காய் விவசாயத்தில் பலத்த அடி விழுந்துள்ளது.
சர்வதேச அளவில் இந்தியா, மத்திய அமெரிக்க நாடான குவாதிமாலாவில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது.
இந்தியாவில் ஏலக்காய் விவசாயத்தில் ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரை செலவு செய்வார்கள். குவாதிமாலா நாட்டில் மானாவாரியில் ஏலக்காய் விளைகிறது.
பராமரிப்பு செலவு முழுமையாக இல்லை. எனவே தான் சர்வதேச மார்க்கெட்டில் இந்திய ஏலக்காய்க்கு போட்டியாக உள்ளது.
விலை குறைவாக கிடைக்கும். இந்தியாவில் கடத்தல் மூலம் கொண்டு வரப்பட்டு, இந்திய ஏலக்காயுடன் கலந்து மார்க்கெட்டில் விற்பனை செய்வார்கள்.
பொதுவாக ஏலக்காய் பறிப்பு ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கி விடும். ஆனால் இந்தாண்டு கடும் வெயில், தொடர்ந்து கனமழை, காற்று, செடிகள் சேதம், அழுகல் நோய் தாக்குதல் போன்றவற்றால் மகசூல் 40 சதவீதம் வரை பாதிக்கப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் குவாதிமாலா நாட்டிலும் கடும் வறட்சி காரணமாக ஏலக்காய் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் ஏலக்காய்க்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
தற்போது கிலோ சராசரி விலை ரூ.2200 வரை உள்ளது. இந்த விலையில் மாற்றம் இருக்கும் என்றும், விலை உயர்வு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.