ரூ.3 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் துணை தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை
தேனி மாவட்டம் போடியில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற போடி முன்னாள் துணை தாசில்தார் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்கு 55, தலைமை குற்றவியல் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
போடி முத்துக்குமார். இவரது தந்தை இருளாண்டி. இருளாண்டி வயது மூப்பால் 2012ல் இறந்தார். இறப்பு சான்றிதழ் வழங்க கோரி முத்துக்குமார் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பணியில் இருந்த தலைமையிடத்து துணை தாசில்தார் பாலமுருகனை அவர் அணுகினார். முத்துக்குமாரிடம் பாலமுருகன் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வழங்கினால் தான் இறப்பு சான்றிதழ் வழங்க முடியும் என்றார்.
முத்துக்குமார் அப்போதைய லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஜான்கிளமென்ட், இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோரிடம் புகார் அளித்தார். 2012 ஜூலை 26ல் லஞ்சம் பெற்ற துணைதாசில்தார் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். மாவட்ட நிர்வாகம் துணை தாசில்தாரை பாலமுருகனை சஸ்பெண்ட் செய்தது.
இவ்வழக்கு தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி கவிதா, துணை தாசில்தார் பாலமுருகனுக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.