மக்களை தேடி முதல்வர், ஜமாபந்தியில் மனு வழங்கியும் தீர்வு காணவில்லை பட்டா மாறுதலுக்கு மனு செய்தவர் புலம்பல்
பட்டா மாறுதல் கோரி மக்களை தேடி முதல்வர், ஜமாபந்தி ஆகியவற்றில் வழங்கிய மனு மீது நடவடிக்கை இன்றி கிடப்பில் உள்ளதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.
கப்பம் 5 வது வார்டு நேருஜி தெருவில் வசிக்கும் முருகன் என்பவர், தனது தந்தை பெயரில் உள்ள வீட்டு பட்டாவை தனது பெயருக்கு மாற்றி வழங்க கோரி 6 மாதங்களுக்கு முன் கம்பத்தில் நடந்த மக்களை தேடி முதல்வர் திட்டத்தில் மனு அளித்தார்.
இம் மனு மீது நடவடிக்கை இல்லை. பின் ஜூலை 2 ல் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்த ஜமாபந்தியில் அதே மனுவை திரும்ப வழங்கினார்.
அதற்கும் தீர்வு இல்லை. வேறு வழியின்றி கடந்த வாரம் வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா அவர்களுக்கு மெயிலில் புகார் அனுப்பியுள்ளார் .
உடனே வருவாய் துறையினர் வந்து விசாரித்துள்ளனர். ஆனால் அதன் பின்னும் நடவடிக்கை இல்லை.
இதே போல் நூற்றுக்கணக்கான மனுக்கள் மீது நடவடிக்கை இன்றி நிலுவையில் உள்ளதாக மக்கள் புலம்புகின்றனர்.
இது குறித்து முருகன் கூறுகையில், பட்டா மாறுதலுக்காக ஆறு மாதங்களாக ஆர்.டி.ஒ. கலெக்டர் , வருவாய் நிர்வாக ஆணையர் வரை மனு கொடுத்து விட்டேன்.
இதுவரை பிரச்னை தீரவில்லை. என்னைப் போன்று பலரும் மனு கொடுத்து விட்டு பதில் வரும் என காத்திருக்கின்றனர் என்கிறார்.