இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க அலுவலர்கள் களப்பணியாற்ற உத்தரவு
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறையினர் களப்பணியாற்ற வேண்டும் என்று தோட்டக்கலைத்துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
காய்கறி, பழப்பயிர்கள் சாகுபடியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. கணிசமாக ஏற்றுமதியும் நடைபெறுகிறது.
ஏற்றுமதி செய்யும் போது, வெளிநாடுகளில் தரப்பரிசோதனை செய்யும்போது பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக இருப்பது கண்டுபிடித்து அதை குறைக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, இயற்கை வேளாண்மையை விவசாயிகள் பின்பற்ற தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தங்கள் பகுதி தோட்டங்களுக்கு சென்று களப்பணியாற்ற தோட்டக்கலைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த அறிவிப்பிற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
எனவே தோட்டக்கலைத்துறையினர் களப்பணியாற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது.