2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஹிந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு
உத்தமபாளையம்: ”2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன,” என, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடந்த வீரவணக்க நாள் கூட்டத்தில் ஹிந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வராசுப்ரமணியன் பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: நாடு முழுதும் இதுவரை தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு ஏராளமானோரை பலி கொடுத்துள்ளோம். அவர்களுக்கு இந்த அரசிடம் இருந்து ஒரு பைசா கூட நிவாரணம் கிடைக்கவில்லை. சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு கூட ரூ.10 லட்சம் நிவாரணம் தருகிறது இந்த அரசு. நம்மிடம் ஹிந்துக்கள் என்ற ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
தேனி மாவட்டத்தில் பரவலாக மதமாற்றம் நடக்கிறது. அதைத் தடுக்க மாநில அரசு தவறி விட்டது. நாடு இன்றைக்கு உலக அரங்கில் வல்லரசாக திகழ்கிறது. காரணம் வலிமையான பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார்.
தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது. 2026ல் இங்கு கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். நமக்கு விரோதமான ஆட்சி இருக்காது. அதற்கான ஆலோசனைகள் துவங்கி விட்டன.
அடுத்தாண்டு கூட்டத்தை ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும். பலியானவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றார்.