போக்குவரத்தில் மாற்றம் கம்பம் உத்தமபாளையம் வழியாக கோம்பை செல்லும் பஸ்கள்
உத்தமபாளையம்: கம்பம், உத்தமபாளையம் வழியாக கோம்பை, – தேவாரம் செல்லும் அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் இன்று ( டிச.6 ) முதல் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுவதாக உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
கோம்பையில் மெயின் ரோட்டில் பழைய போலீஸ் குடியிருப்பு அருகில் பாலம் பழுதடைந்துள்ளது.
இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை பணிகளை துவக்குகிறது. எனவே கம்பம், உத்தமபாளையத்தில் இருந்து கோம்பை வழியாக பண்ணைப்புரம், தேவாரம் செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள், கனரக வாகனங்கள் உ. அம்மாபட்டி, புலிகுத்தி சிந்தலசேரி, பல்லவராயன்பட்டி வழியாக பண்ணைப்புரத்தை அடைந்து பின் தேவாரம் செல்லும். அதே போல தேவாரம், பண்ணைப்புரம் வழியாக கோம்பை செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் பல்லவராயன்பட்டி, புலிகுத்தி, மார்க்கையன்கோட்டை வழியாக உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் சென்றடைய வேண்டும்.டூவீலர்கள் மற்றும் கார்கள் , சிறிய வாகனங்கள் பாலம் நடைபெறும் இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக செல்லலாம். பாலம் கட்டுமான பணிகள் முடியும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.