காசநோயை தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உத்தரவு : தினமும் 15 சர்க்கரை நோயாளிகளை பரிசோதனை செய்ய இலக்கு
உலகம் முழுவதும் காச நோய் வேகமாக பரவி வருகிறது. சர்வதேச அளவில் காச நோய் ஒழிப்பு திட்டம் வெற்றியடைவதில் பல சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சிகிச்சை முறைகளை உலக சுகாதார நிறுவனம் மாற்றியமைத்துள்ளதாக மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். தமிழகத்திலும் காச நோய் அதிகரித்துள்ளது என்றும், குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே காசநோய் பரவுவதை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை காச நோய் கட்டுப்பாட்டு பிரிவும், பொதுச் சுகாதார துறையும் இணைந்து துவக்கி உள்ளது.
இதில் சர்க்கரை நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே அவர்களுக்கு காச நோய் பரவும் வாய்ப்பு எளிதாகும். எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, சிகிச்சைக்கு வரும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு காச நோய் உள்ளதா என்பதை எக்ஸ்ரே பரிசோதனை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள் ஒன்றுக்கு குறைந்தது சர்க்கரை நோயாளிகள் 15 பேர்கள் மற்றும் சிகிச்சைக்கு வரும் முதியவர்களையும் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு நிக்சய் சிவிர் ஸ்கிரீனிங் புரோகிராம் (NIK Shay Shivir Screening Programme) என பெயரிடப்பட்டுள்ளது.
பரிசோதனை விபரங்களை அதாவது பரிசோதனை செய்யப்பட்டவருக்கு காச நோய் உள்ளதா இல்லையா என்பதை நிக்சய் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் காசநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்