உத்தமபாளையம் பைபாஸில் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் வாரச்சந்தை கூடும் நாளில் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
உத்தமபாளையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாரச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. பைபாஸ் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் வரை ரோட்டிற்கு மேற்கு பக்க காலி இடத்தில் கடைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ரோட்டின் கிழக்கு பக்கம் வாகன நிறுத்தமாகவும், கையேந்தி பவன் ஒட்டல்களும் திறக்கப்பட்டுள்ளன. ரோட்டில் மையப்பகுதியில் ஆட்டோக்களும் நிறுத்தப்படுகிறது. இதனால் சந்தை நாளில் பைபாஸ் ரோட்டில் வாகன போக்குவரத்து கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.இதில் ரோட்டிலேயே காய்கறிகள், பழங்கள் போட்டு விற்பனை செய்கின்றனர்.
வாரச் சந்தை கூடும் நாளில் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் உச்சகட்டத்தில் உள்ளது. குறிப்பாக பிற்பகல் முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசலும் அதிகம் உள்ளது. கிழக்கு பக்கம் நூற்றுக்கணக்கில் டூவீலர்கள் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அரசு பஸ்கள்,தனியார் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.
போக்குவரத்து நெரிசலை சரி செய்யவேண்டிய போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். கட்டணம் வசூலிப்பதோடு சரி என பேரூராட்சி கண்டு கொள்ளாமல் உள்ளது. இதற்கு தீர்வாக வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும். அல்லது போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.