ஒரு ஏ.சி. பெட்டி நீக்கம் போடி- சென்னை ரயிலில் கூடுதலாக பெட்டி இணைப்பு
தேனி : போடி-சென்னை ரயிலில் இருந்து ஒரு ஏ.சி., பெட்டியை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
போடியில் இருந்து சென்னைக்கு வாரத்தில் மூன்று நாட்கள் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் ஒரு பெண்கள் பெட்டி உட்பட 4 முன்பதிவில்லா பெட்டிகள், சாதாராண முன்பதிவு பெட்டிகள் 4, திரிடயர் ஏ.சி., பெட்டிகள் 7, இரண்டடுக்கு ஏ.சி., பெட்டிகள் 2, ஒரு முதல் தர ஏ.சி., பெட்டியுடன் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பல்வேறு ரயில் பயணிகள் சங்கங்கள் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்க கோரிக்கைகள் வைத்தன.
இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து போடி வந்த அதிவிரைவு ரயிலில் திரிடயர் ஏ.சி., பெட்டி ஒன்று குறைக்கப்பட்டு, ஒரு முன்பதிவில்லாத பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இனி பெண்கள் பெட்டி உட்பட மொத்தம் 5 முன்பதிவில்லாத பெட்டிகளுடன் ரயில் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் சாதாரண படுக்கை வசதி கொண்டு முன்பதிவு பெட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.