சுருக்கெழுத்து, தட்டச்சு தேர்வு பிப்.15 முதல் துவக்கம்
போடி: ‘தமிழக அளவில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில் சுருக்கெழுத்து, தட்டச்சு, வணிகவியல் தேர்வு பிப்.15 முதல் துவங்கப்படும்’ என அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
இந்த இயக்குனரகம் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்டில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சு (டைப் ரைட்டிங்), சுருக்கெழுத்து (சார்ட் ஹேண்ட் ), வணிகவியல் (அக்கவுண்டன்சி) தேர்வுகள் நடைபெறும்.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றவர்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப் 4 எழுதி எளிதில் ‘கட் ஆப்’ மதிப்பெண்கள் மூலம் வேலை வாய்ப்பை பெறலாம் என்பதால் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் தேர்வு எழுதுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2025 பிப்ரவரியில் துவங்க உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சு, வணிகவியல் தேர்வுக்கு டிச.16 முதல் 2025 ஜன.17 வரை (www.tndtegteonline.in) என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சுருக்கெழுத்து உயர்வேக தேர்வு 2025 பிப்.15, 16லும், இளநிலை, முதுநிலை தேர்வு பிப்.22, 23லும் வணிகவியல் இளநிலை, முதுநிலை தேர்வு பிப்.24லும், தட்டச்சு இளநிலை, முதுநிலை, முதுநிலை உயர் வேகம் மார்ச் 1, 2லும் நடக்க உள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் வரும் மே 6ல் வெளியாகும் என அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.