Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கும்பக்கரை அருவியில் 4வது நாளாக தொடர் வெள்ளப் பெருக்கால் குளிக்க தடை

பெரியகுளம், டிச.16: கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கால் நான்காவது நாளாக நேற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் அருவி வெறிச்சோடியது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணை, ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலை, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

கடந்த மூன்று தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மோதிய மழை இல்லாதபோதும் அருவிக்கு நீர்வரத்து உள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 4வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் அருவி வெறிச்சோடியது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை இந்த தடை தொடரும்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *