கம்பராயப் பெருமாள் கோயில் திருமண மண்டபம் கட்டும் பணிகள் நிறுத்தி வைப்பு
கம்பம்: ‘கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் ரூ.3.75 கோடியில் கட்டும் பணிகள், ‘அனுமதி பெறவில்லை’ எனக் கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் கம்பம் நகரின் மையப் பகுதியில் உள்ளது. பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. புராதனமும், பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஒரே வளாகத்தில் சிவனும், பெருமாளும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ள சிறப்பு பெற்ற தலமாகும்.
இக்கோயில் வளாகத்தின் ஒரு பகுதி நீண்ட காலமாக பஸ் ஸ்டாண்டாக செயல்பட்டு வந்தது. நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்து சமய அறநிலையத்துறை திரும்ப பெற்றுக் கொண்டது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் முயற்சியில் கோயில் வளாகத்தில் ரூ.3.75 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்ட கடந்த பிப்.17 ல் பூமி பூஜை நடந்து, கட்டடப் பணிகள் துவங்கியது.
கோயில் வளாகம் என்பதால் செயல் அலுவலரும், ஒப்பந்தகாரரும் அரசு துறைகளின் அனுமதி பெறாமல் கட்டட பணிகளை துவங்கி உள்ளனர். ஆனால் நகரமைப்புத்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
கோயில் நிர்வாகம் சார்பில் முறைப்படி அனுமதி பெற கடிதங்கள் அனுப்பப்பட்டது. அதன் பின் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்து, அனுமதி வழங்கினர். பொதுப்பணித்துறை, இதர துறைகள் ஆய்வு செய்ய வர உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கோயில் வளாகத்திற்கு வந்த எம்.பி. தங்கதமிழ் செல்வன், உரிய அனுமதிகள் பெற்று கட்டடத்தை விரைந்து கட்டி முடிக்கவும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார்.
இதுகுறித்து செயல் அலுவலர் நதியா கூறுகையில், ‘தீயணைப்புத்துறை என்.ஓ.சி., வழங்கி உள்ளது. இன்னும் சில நாட்களில் ஆய்வு செய்து அனுமதி வழங்க உள்ளனர். குறிப்பிட்ட காலக்கெடுவில் திருமண மண்டபம் கட்டப்படும். எம்.பி.,யும் தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார்.’, என்றார். அதிகாரிகள் சட்ட விதிமுறைகளை உரிய வழியில் பின்பற்றி திருமண மண்டபங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.