Saturday, June 7, 2025
மாவட்ட செய்திகள்

கல்லாற்றின் குறுக்கே பாலம், சாலை அமைக்க ரூ.7.14 கோடி மதிப்பிலான திட்டம் துவக்கம்

பெரியகுளம்: ‘சின்னுார், பெரியூர் மலை கிராம மக்கள் அடிக்கடி கல்லாற்றில் சிக்கிக் கொள்வதை தடுக்க கல்லாற்றின் குறுக்கே ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுமானப் பணிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி, பெரியகுளம் அடுக்கம் ரோடு வழியாக கொடைக்கானல் செல்வதற்கு அரசு பஸ் தயாராகி உள்ளது.’ என, தெரிவித்தார்.

பெரியகுளத்தில் இருந்து 3 கி.மீ., துாரம் சின்னாம்பாளையம் அருகே கல்லாறு உள்ளது. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளகெவி ஊராட்சியில் சின்னுார், பெரியூர் மலை கிராமங்களில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மலை வாழ் மக்கள், பழங்குடியினர் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு ‘டோலி’ மூலம் துாக்கிக் கொண்டு மலைப்பாதை வழியாக பெரியகுளம் மருத்துவமனைக்கும், விவசாய விளைப் பொருட்களை குதிரைகள் மூலம் கமிஷன் கடைக்கு கொண்டு வருவதற்கு கல்லாற்றை கடந்து வர வேண்டும்.

மழைக் காலங்களில் கல்லாற்றில் கூடுதலாக தண்ணீர் வரும் போது ஆற்றை கடக்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கல்லாற்றின் குறுக்கே பாலம் கட்டவும், மலைப் பகுதியில் சாலை வசதி செய்து தர மலைக்கிராம மக்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

அடிக்கல் நாட்டு விழா:

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ‘ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மூலக்கூறு திட்டத்தின்’ கீழ் கல்லாற்றின் குறுக்கே ரூ.5.29 கோடி மதிப்பில் 58 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்திற்கு பாலமும், ரூ.1.85 கோடி மதிப்பில் 1200 மீட்டர் நீளம் சாலை அமைப்பதற்கு பழநி செந்தில்குமார் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்.

திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, கொடைக்கானல் ஒன்றிய தலைவர் சுவேதா ராணி, வெள்ளகெவி ஊராட்சித் தலைவர் புருஷோத்தமதாஸ், தமிழ்நாடு விவசாய சங்க பொருளாளர் பாண்டியன், மாவட்ட விவசாய சங்க இளைஞரணி தலைவர் வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

அடுக்கம் வழியாக கோடைக்கு ‘மினி பஸ்’கள்

எம்.எல்.ஏ., கூறியதாவது: கொடைக்கானல் செல்வதற்கு பெருமாள் மலையில் இருந்து ஒரு வழி பாதையாக உள்ளது

. கூடுதலாக வில்பட்டி, கோவில்பட்டி வழியாக பழநி பாதையை இணைக்கும் விதமாக மாற்று பாதையை அமைப்பதற்கு ஆய்வு பணி நடந்துள்ளது. பெரியகுளம் அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்வதற்கு சிறிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது, விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.’ என, தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *