மதுரை மேயரின் உறவினர் மீது தீ வைத்த மனைவி கைது
கூடலுார்: தேனி மாவட்டம் கூடலுாரில் குடும்பத்தகராறில் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சகோதரரான பொன் விஜய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அவரது மனைவி இலக்கியாவை போலீசார் கைது செய்தனர்.
கூடலுார் கள்ளர் வடக்கு புதுத்தெருவைச் சேர்ந்தவர் பொன் விஜய் 48. இவரது மனைவி இலக்கியா 37. இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் குடும்பத்தகராறு இருந்துள்ளது. நேற்று காலை 9:30 மணிக்கு தன் வீட்டில் கட்டிலில் தூங்கிய கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு மனைவி வெளியேறி விட்டார்.
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து நிலையில் பொன் விஜய் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ வைத்ததில் முகம், மார்புப்பகுதி, கைகள், கால்கள் எரிந்து ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பொன் விஜயின் தாயார் கண்ணம்மாள் புகாரில் பேரில் கூடலுார் வடக்கு போலீசார் விசாரித்து இலக்கியாவை கைது செய்தனர். பொன் விஜய் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சகோதரர் ஆவார்.