Friday, June 6, 2025
மாவட்ட செய்திகள்

விண்ணில் இந்திய ஆராய்ச்சி நிலையம் 2035ல் செயல்பட துவங்கும் தேனியில் இஸ்ரோ தலைவர் தகவல்

விண்வெளியில் இந்தியாவின் ஆராய்ச்சி நிலையம் 2035ல் செயல்பட துவங்கும் என தேனியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசினார்.

தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: வேளாண், கல்வி, விண்வெளித்துறை என அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது. பொருளாதாரத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை பின்தள்ளி 5 வது இடத்தில் உள்ளது.

நம் நாட்டில் விண்வெளித்துறை 1969ல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை 131 செயற்கைகோள்களை செலுத்தி உள்ளோம். அதில் 56 செயற்கை கோள்கள் தற்போது இயங்குகின்றன. நாட்டின் எல்லைகள் 24 மணி நேரமும் செயற்கைகோள்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உலகில் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் குறைந்த செலவில் முதல் முயற்சியில் தரையிறங்கியது, கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் 3 உலக சாதனைகள் என விண்வெளி துறையில் பல சாதனைகள் இந்தியா வசம் உள்ளன. அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 12 உலக சாதனைகள் படைக்க உள்ளோம்.

சார்க் நாடுகளுக்காக செயற்கைகோள் நன்கொடை அளித்துள்ளோம். ஜி 20 நாடுகளுக்காக ஒரு செயற்கை கோள் தயாரித்து வருகிறோம். உலகிலேயே அதிக மதிப்புடைய செயற்கைகோள் நாசா-இஸ்ரோ இணைந்து தயாரிக்கிறோம். இந்த செயற்கைகோள் இந்திய ராக்கெட் மூலம் விண்ணிற்கு செல்ல உள்ளது.

சந்திராயன் 4 மூலம் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்து சோதனை செய்ய உள்ளோம். இந்தியர்களை விண்ணிற்கு அனுப்ப ககன்யான் திட்டத்தை மார்ச் 2027ல் செயல்படுத்த உள்ளோம். விண்வெளியில் இந்தியாவிற்கான ஆராய்ச்சி நிலையம் 2035ல் அமையும், அங்கு சோதனை செய்வோம்.

தற்போது 30 ஆயிரம் எடை உள்ள செயற்கைகோளை கொண்டு செல்லும் ‘என்ஜெட்’ எனும் புதிய கனரக ராக்கெட் தயாரித்து வருகிறோம். இந்தியர்களை 2040ல் சந்திரனுக்கு அழைத்து செல்லும் வகையில் ராக்கெட் வடிவமைத்து வருகிறோம். அந்த ராக்கெட்டின் உயரம் 120 மீட்டர், 3 ஆயிரம் டன் எடை இருக்கும். இதில் 75ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கை கோள் கொண்டு செல்ல இயலும். இன்னும் 5 ஆண்டுகளில் 100 செயற்கை கோள்கள் அனுப்பும் திட்டம் உள்ளது. நம் வெற்றிக்கு காரணம் குழு செயல்பாடுகள் தான், என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: சந்திராயன் 2ல் ஏற்பட்ட பிழைகளை ஒரு மாதத்தில் கண்டறிந்தோம். சந்திராயன் 3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திராயன் 4 இரு ராக்கெட்டுகள் இணைத்து அனுப்பபட உள்ளது. அதற்கான சோதனை முடிந்துள்ளது. இந்த சோதனையில் இந்தியாவையும் சேர்த்து 4 நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. சந்திராயன் 5 நிலவில் 100 நாட்கள் இயங்கும் வகையில் தயாராகிறது. குலசேகரப்பட்டினம் ஏவுதள மையத்திற்கான 95 சதவீத நில கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது. இத்தளம் 2026 டிச.,ல் செயல்பாட்டிற்கு வரும். வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ரயான் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *