குரங்கணியில் அலைபேசி டவர் அமைக்கும் பணி முடக்கம் மலைக் கிராமத்தினர் , சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு
போடி : குரங்கணி மலைப்பகுதியில் பி.எஸ்.என்.எல்., டவர் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தொலை தொடர்பு இன்றி மலைக் கிராம மக்களும், சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
போடியில் இருந்து 18 கி.மீ.. தொலைவில் அமைந்துள்ளது குரங்கணி மலைப்பகுதி. இங்கு இருந்து 22 கி.மீ., தூரத்தில் டாப் – ஸ்டேஷன் உள்ளது. இப்பகுதியில் கொழுக்குமலை, முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. குரங்கணி – டாப்ஸ்டேஷன் வழியாக மூணாறு செல்வதால் 40 கி.மீ., தூரம் குறைகிறது. குரங்கணி பகுதியில் அலைபேசி டவர் இல்லாததால் இப்பகுதி மக்கள் அலைபேசி பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கொழுக்குமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் பலியாயினர். அலைபேசி டவர் இல்லாததால் அப்பகுதியில் இருந்து மற்ற நபர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமலும்,பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும் சிரமம் ஏற்பட்டது.
இதனால் குரங்கணியில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர் அமைக்க ஆறு ஆண்டுகளுக்கு முன் சர்வே நடந்தது. சர்வே நடத்தியதோடு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மலைக் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் அலைபேசி டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் குரங்கணி அருகே கொட்டகுடி, போடி அருகே முந்தல், அகமலை, பளிமுத்தன் கரடு உள்ளிட்ட பகுதிகளில் ‘ யுனிவர்சல் சர்வீஸ் அப்ளிகேஷன்’ என்ற திட்டத்தின் கீழ் பி.எஸ்.என்.எல்., மூலம் டவர் அமைக்கும் பணிக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
முதல் கட்டமாக முந்தலில் அலைபேசி டவர் அமைத்தனர். குரங்கணியில் டவர் அமைக்கவில்லை. மலைக் கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் அலைபேசி டவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.