‘சிசிடிவி கேமரா’ எண்ணிக்கை அதிகப்படுத்த அறிவுறுத்தல்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் தனியார், பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
குற்றச்செயல்களை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும் சிசிடிவி கேமரா போலீசாருக்கு பக்கபலமாக உள்ளது. சமீப காலமாக அரசு, தனியார் நிறுவனங்கள், பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குக்கிராமம் முதல் நகர் பகுதி வரை அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்திக்கொள்ள போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
போலீசார் கூறியதாவது: ஆண்டிபட்டி நகர் பகுதியில் தற்போது 500 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப இது போதுமானதாக இல்லை. பெரும்பாலான கிராமங்களில் இந்த வசதி இன்னும் சென்று சேரவில்லை. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கூடுதலான அளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸ் மேலிடம் அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி பகுதியில் பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.