நாட்டு சோளத்திற்கு தட்டுப்பாடு விதை தேடும் விவசாயிகள்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் நாட்டு ரக சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை சாகுபடியில் விதைப்பு செய்ய விதை சோளம் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட ஆண்டிபட்டியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு போகம் மானாவாரியாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கரில் இறவை பாசனத்தில் இருபோகமும் சாகுபடி செய்கின்றனர்.
கோடை சாகுபடியில் இறவை பாசன நிலங்களில் விவசாயிகள் பலரும் சிறு தானியங்களில் நாட்டு ரக சோளம், சிவப்பு சோளம், கம்பு ஆகியவற்றை தேர்வு செய்கின்றனர்.
கடந்த காலங்களில் விவசாயிகள் அறுவடைக்கு பின் குறிப்பிட்ட அளவில் தானியங்களை எடுத்து அடுத்த முறை விதைப்புக்காக பத்திரப்படுத்தி விடுவர். விவசாயத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டதால் விதைப்புக்கான தானியங்களை பத்திரப்படுத்துவதை தவிர்த்துள்ளனர்.
தனியார் விதைகள் பூச்சி மருந்து விற்பனை கடைகள், ஒருங்கிணைந்த விவசாயத்துறை அலுவலகங்களில் இருப்பில் வைக்கப்படுபவைகளை தேவையான நேரங்களில் வாங்கி விதைப்புக்கு பயன்படுத்துகின்றனர்.
தற்போது ஆண்டிபட்டி பகுதியில் தனியார் மற்றும் விவசாயத்துறை அலுவலகங்களில் விதைப்புக்கான நாட்டு ரக சோளம் கிடைக்கவில்லை.
விவசாயிகள் கூறியதாவது: இறவை பாசன நிலங்களில் தை, மாசி மாதங்களில் தினை, கேழ்வரகு, பனி வரகு, சோளம், சிவப்பு சோளம் ஆகியவற்றை விதைப்பு செய்வர்.
விதைப்பு முதல் அறுவடை வரை இப்பயிருக்கான காலம் 100 நாட்களுக்கு மேல் ஆகும். தற்போது கடைகளில் கிலோ ரூ.40க்கும் நாட்டு ரக சோளம் கிடைக்கவில்லை. நாட்டு ரக சோளம், கம்பு ஆகியவை மாவு, பிஸ்கட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் தட்டுப்பாடு உள்ளது.
வேளாண்மை துறை உதவி இயக்குனர் கண்ணன் கூறியதாவது: ஒருங்கிணைந்த வேளாண்மை துறை அலுவலகத்தில் நாட்டு ரக சோளம் விற்பனை செய்யப்படுவதில்லை.
60 நாளில் பலன் தரும் மேம்படுத்தப்பட்ட ரகசோளம் இருப்பில் உள்ளது என்றார்.