சுருளி அருவியில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பு சுற்றுலா பயணிகள் அவதி
கம்பம்: சுருளி அருவியில் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையும், வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் எழுந்துள்ளது.
சுருளி அருவி சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள அருவியில் குளிப்பதற்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வெளியூர்களிலிருந்து வருகின்றனர்.
மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் திரளாக பொதுமக்கள் இங்கு வருகின்றனர். விசேஷ நாட்களில் அதிகளவில் வருகின்றனர்.
சுருளி அருவியை சுற்றுலா தலமாக அறிவித்து, ஆண்டுதோறும் சாரல் விழாவை நடத்திய போதும், அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், எந்தவித வளர்ச்சி பணிகளும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் கூட செய்ய முடியவில்லை.
இதற்கிடையே அருவி பகுதிக்குள் நுழைந்தவுடன் சுருளிப் பட்டி ஊராட்சியும், சற்று தள்ளி வனத்துறையும் சோதனை சாவடிகளை அமைத்த நுழைவு கட்டணம் வசூலிக்கிறது.
நுழையும் இடத்தில் இருந்து வனத்துறை கேட் வரை ரோட்டின் இரண்டு பக்கமும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.
இந்த சாலையோர கடைகளின் உரிமையாளர்கள் சமீபத்தில் ரோட்டின் பாதி பகுதியை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கும், சுற்றுலா பயணிகள் நடக்கவும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என தெரியவில்லை.
ஊராட்சி ஒன்றியம், வருவாய்த் துறை, வனத்துறை என யாரும் இவர்கள் விசயத்தில் தலையிட முன்வராததால், சுருளிக்குள் செல்ல முடியாத அளவிற்கு நடு ரோட்டில் கடைகள் அமைத்துள்ளனர்.
ஆக்கிரமிப்புக்களை அகற்றி, சுற்றுலா தலத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும், கலெக்டர் ரஞ்ஜித் சிங் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.