நிறைவேறாத பசுமை போர்வை இலக்கு நடப்பு ஆண்டிற்கு தயாராகும் நிலை
கம்பம்: மாவட்டத்தில் பசுமை போர்வை மரக்கன்றும் நடும் திட்டத்தில் கடந்த ஆண்டு இலக்கே நிறைவேறாத நிலையில் நடப்பு நிதியாண்டிற்கு இலக்கு நிர்ணயிக்க தயாராவதால் அதிகாரிகள் புலம்புகின்றனர்.
விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி, நடவு செய்ய அரசு திட்டமிட்டது.
இதற்கென ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களில் 2023–2024 ம் ஆண்டிற்கு 1.60 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு வட்டாரத்திற்கு தலா 20 ஆயிரம் இலக்கு என்றும், இதில் தேக்கு, பலா, குமிழ், மகாகனி, சவுக்கு மரக்கன்றுகள் அந்தந்த வனத்துறை அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டது.
வரப்பு ஒரங்கள், ஒடைகள், பாதை ஓரங்கள் என கிடைக்கும் இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டது
விரும்பும் விவசாயிகள் ஆதார், சிட்டா, பேங்க் பாஸ்புக் முன்பக்கம் உள்ளிட்ட ஆவணங்களை அந்தந்த வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என உதவி இயக்குநர்கள் அறிவித்தனர்.
ஆனால் அறிவித்ததோடு சரி. யாரும் இந்த பணியை முன்னெடுக்கவில்லை. இதனால் மரக்கன்றுகள் நடவு என்பது ஒரு சில வட்டாரங்களில் பெயரளவிற்கு நடைபெற்றது. பலரும் இப் பணியில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அனுமதிக்கப்பட்ட மரக்கன்றுகள் தேக்கமடைந்துள்ளது.
இதற்கிடையே இந்த 2024 -2025 ம் நிதியாண்டிற்கு இலக்கு நிர்ணயிக்க வேளாண் இயக்குநரகம் தயாராகி வருகிறது.
ஆனால் கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட மரக் கன்றுகள் இன்னமும் முழு அளவில் விநியோகம் செய்யாத நிலை இருப்பதாக அதிகாரிகளே புலம்புகின்றனர்.
மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டத்தில் கூடுதல் அக்கறை செலுத்த உதவி இயக்குநர்களை, இயக்குநரகம் அறிவுறுத்த வேண்டும்.