இலவச திருமண ஜோடிகளின் விபரம் விசாரிக்க அவகாசம் தேவை
தேனி; அறநிலையத்துறையின் சார்பில் இலவச திருமணத்திற்கு பதிவு செய்த ஜோடிகளின் விபரங்களை விசாரிக்க போதிய கால அவகாசம் வழங்காமல், அறநிலையத்துறை நெருக்கடியில் விபரங்களை அளிப்பதால் போலீசார் புலம்புகின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை இலவசமாக வழங்கி, ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதில் பதிவு செய்த ஏழை எளிய ஹந்து குடும்பத்தினரின் தலா ஒரு ஜோடிக்கு 4 கிராம் தங்கத்தாலி, சேலை, வேட்டி, சட்டை, 20 பேர்களுக்கு சாப்பாடு, கட்டில், மெத்தை, பாய், மிக்ஸி உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படும்.
ஒரு முகூர்த்தத்திற்கு 9 திருமணங்கள்நடத்தி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு ஜோடி மட்டுமே திருமணத்திற்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது வழக்கு உள்ளதா, முதல் திருமணம் செய்ய பதிவு செய்தவர்கள்தானா உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்ய, போலீசாரிடம் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.
மார்ச் 14ல் நடக்க உள்ள நிலையில் 2 நாட்கள் இடைவெளியில் விண்ணப்பம் வழங்குவதால் நெருக்கடி நிலையில் வழங்குவதை போலீசார் முழுமையாக விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
4 நாட்கள் இடைவெளியில் விண்ணப்பம் வழங்கினால் உதவியாக இருக்கும் என போலீசார் கோரியுள்ளனர்.