வாகனங்களை வழி மறித்த யானை உயிர் தப்பிய சுற்றுலா படகு டிரைவர்
மூணாறு: மூணாறு அருகே விரிந்த கொம்பன் காட்டு யானை ரோட்டில் வாகனங்களை வழிமறித்த நிலையில், அதன் முன் சிக்கிய சுற்றுலா படகு டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மூணாறு பகுதியில் கடந்த சில மாதங்களாக விரிந்த கொம்பன் எனும் ஆண் காட்டு யானை சுற்றித்திரிகிறது.
அந்த யானை பெரும்பாலான நாட்களில் லெட்சுமி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு வருகிறது. அப்பகுதியில் ஈஸ்ட் டிவிஷனில் சிவன்மலை எஸ்டேட் தேயிலை பாக்டரிக்கு செல்லும் ரோட்டில் நேற்று காலை 8:30 மணிக்கு யானை முகாமிட்டது.
அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த மாட்டுபட்டி அணையில் மாவட்ட சுற்றுலாதுறைக்குச் சொந்தமான சுற்றுலா படகு டிரைவர் ரமேஷ் 56, யானையின் முன் பத்தடி தூரத்தில் சிக்கினார்.
அதனை பார்த்து சுதாரித்து கொண்டவர் டூவீலரை வேகமாக திருப்பி வந்த வழியில் சென்று மாற்று பாதையில் சென்றதால் உயிர் தப்பினார்.
ரோட்டில் ஒரு மணி நேரம் யானை நின்றதால் வாகனங்கள் கடந்து செல்ல இயலவில்லை.
அருகில் உள்ள காட்டிற்கு யானை தாமாக சென்ற பிறகு வாகனங்கள் செல்ல துவங்கின.
அதே பகுதியில் நேற்று பகல் முழுவதும் யானை முகாமிட்டதால் தொழிலாளர்கள் உள்பட மக்கள் அச்சத்துடன் நடமாடினர்