வைகை அணையில் முடங்கிய செயற்கை நீரூற்றுக்களால் ஏமாற்றம்
ஆண்டிபட்டி : வைகை அணையில் பராமரிப்பின்றி செயல்படாமல் முடங்கி கிடக்கும் செயற்கை நீரூற்றுக்கள் சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு வைகை அணை மற்றும் பூங்கா ஒரு நாள் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளது. கொடைக்கானல், கேரளா சுற்றுலா வரும் பயணிகள் வைகை அணை பூங்கா பார்த்து செல்ல தவறுவதில்லை. பரந்து விரிந்த நீர்த்தேக்கம், வலது, இடது கரைகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள், பூங்காக்களில் உள்ள மாதிரி ரயில், மாதிரி அணை ஆகியவை முதன் முறையாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு குதூகலம், பிரமிப்பு தருவதாக உள்ளது. வைகை அணை நுழைவுப்பகுதி, வலது இடது கரைகளில் செயற்கை நீரூற்றுக்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நீரூற்றுக்கள் பராமரிப்பின்றி முடங்கி கிடக்கிறது. தற்போது கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இன்னும் சில மாதங்களுக்கு கூடுதலாக இருக்கும்.
சுற்றுலா வரும் பயணிகளின் ஏமாற்றத்தை போக்க செயல்படாத செயற்கை நீரூற்றுக்களை செயல்படுத்த வைகை அணை நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.