செங்கல் விலை உயர்வு: கட்டுமான பணிகள் மந்தம்
கம்பம் : செங்கல் விலை உயர துவங்கிய நிலையில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பு இல்லாததால் செங்கல் வியாபாரத்தில் மந்த நிலை நிலவுவதாக சூளை உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.
கம்பத்தில் நூறு செங்கல் காளவாசல்கள் இருந்தது. படிப்படியாக குறைந்து தற்போது 30 உள்ளன. செங்கல் ஆயிரம் கல் ரூ.5800 என ஓராண்டாக விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக விலை ஏற்றம் கண்டு தற்போது ரூ.6200 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் சமீப காலமாக செங்கல் உற்பத்தியில் இயந்திர பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் செங்கல், எடை கூடுதலாகவும், ஒரே சீராக இருப்பதால், பொதுமக்கள் மிஷின் கல்லை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். மிஷின் கல் விலை ரூ.7200 ஆக உள்ளது.இந்த விலை உயர்வு செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது.
இது தொடர்பாக சூளை உரிமையாளர்கள் கூறியதாவது: செங்கல் உற்பத்தி செய்ய களிமண், செம்மண், களிப்பு மண் தேவைப்படும். மானாவாரி நிலங்களில் கனிமவளத்துறையின் அனுமதி பெற்று எடுக்க வேண்டும். கடந்த ஒராண்டிற்கும் மேலாக போடி அருகில் இருந்து 4 யூனிட் மண் ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி உற்பத்தி நடைபெறுகிறது. ஆயிரம் கல் ரூ.6200 வரை கிடைக்கிறது. ஆனால் கட்டுமானங்கள் வேகம் இல்லாததால் வியாபாரம் டல்லடிக்கிறது. மேலும் கட்டுமான தொழில் செய்பவர்கள் பலர் சேம்பர் கல்லை விரும்புகின்றனர் என்றார்.