தெப்பத் திருவிழா நடத்த வலியுறுத்தல்
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் தெப்பம் பராமரிப்பு பணியை நிறைவு செய்து தெப்பத் திருவிழா நடத்த அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் பழமையானதும், பிரசித்தி பெற்ற தலமாகும். ராகு, கேது பரிகார தலமாகவும் உள்ளது. கோயில் திருப்பணிகள் முடிந்து கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பணிகள் நடைபெறுவதற்கு முன்பே தெப்ப பராமரிப்பு பணிகளும் துவங்கப்பட்டது. ஆனால் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தும், தெப்ப பராமரிப்பு பணிகள் முழுமை அடையாமல் கிடப்பில் போடப்பட்டது.
உத்தமபாளையத்தில் அனைத்து சமூகத்தினமும் இணைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் நிறுத்தி வைத்திருந்த தேரை, புதுப்பித்து தேரோட்டம் நடத்தினார்கள். இனி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேரோட்டம் நடைபெறும். தேரோட்டம் நிறைவு பெற்றவுடன் தெப்பத் திருவிழா நடைபெறுவது மரபு. ஆனால் ஓடாத தேரை புதுப்பித்து தேரோட்டம் நடத்தியும், தெப்பத் திருவிழாவை நடத்த முடியவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் உள்ளது.
அரசின் பங்களிப்பு, உபயதாரர்கள் மூலமும் தெப்ப பராமரிப்பு பணிகள் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கி, கிடப்பில் போடப்பட்டுள்ளது. தெப்பத்தை பற்றி ஹிந்து அறநிலைய துறை கண்டுகொள்ளாமல் உள்ளது.
தெப்பத்தில் மைய மண்டபம் கட்டவும், தெப்ப திருவிழா நடத்த அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்