மூணாறு ஊராட்சி துணை தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் தேர்வு
மூணாறு : மூணாறு ஊராட்சி துணைத் தலைவராக காங்கிரசை சேர்ந்த மார்ஸ்பீட்டர் 41, தேர்வு செய்யப்பட்டார்.
மூணாறு ஊராட்சியில் 17ம் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த பாலசந்திரன் கடந்த உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர், 2023 பிப்ரவரியில் காங்கிரசில் இணைந்தார். அவரை, கட்சி தாவல் தடை சட்டத்தில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்தும், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் பிப் 25ல் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அவர், 2023 செப்டம்பர் முதல் ஊராட்சி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
அந்த பொறுப்பு காலியானதால், துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று மாவட்ட புள்ளியியல்துறை கூடுதல் அதிகாரி ஜெயசங்கர் முன்னிலையில் நடந்தது.
காங்., வசம் உள்ள ஊராட்சியில் காங்., 11, இடது சாரி கூட்டணி 8 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் 9ம் வார்டு உறுப்பினர் மார்ஸ்பீட்டர், இடது சாரி கூட்டணி சார்பில் 5ம் வார்டு உறுப்பினர் கணேசன் ஆகியோர் போட்டியிட்டன. அதில் மார்ஸ் பீட்டருக்கு 11, கணேசனுக்கு 8 என்ற எண்ணிக்கையில் ஓட்டுகள் பதிவானதால், மார்ஸ்பீட்டர் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே அவர், 2021 ஜனவரி முதல் 2022 ஜனவரி வரை துணைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.