தி.மு.க., நிர்வாகி மகன் தாக்கியதில் ஒயர்மேன் மருத்துவமனையில் அனுமதி
தி.மு.க., நிர்வாகி மகன் தாக்கியதில் ஒயர்மேன் மருத்துவமனையில் அனுமதி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே ஒயர்மேன் தங்கராஜ் 51, என்பவரை தாக்கிய தி.மு.க., கிளைச் செயலாளர் போஸ் மகன் ஆனந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலப்பட்டியை சேர்ந்த தங்கராஜ் கடமலைக்குண்டு மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணிபுரிகிறார். இவர் ஏப்.,11ல் ராஜேந்திராநகர் திருவிழாவில் விளக்குகள் சீரமைத்து கொண்டிருந்தார். அவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட தி.மு.க., கிளைச் செயலாளர் போஸ், அண்ணாநகர் விநாயகர் கோயில் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறினார். தங்கராஜ் அங்கு சென்று டிரான்பார்மரில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த போஸின் மகன் ஆனந்தகுமார், ‘இன்னுமா சீரமைக்கவில்லை,’ என மரியாதை குறைவாக பேசினார். சில நிமிடங்கள் ஆகும் என கூறி தங்கராஜ் கீழே இறங்கினார். அவரை அசிங்கமாக பேசி, ஆனந்தகுமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். காயமடைந்த தங்கராஜ் தேனி மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். கண்டமனுார் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்நிலையில் தங்கராஜ் உறவினர்கள் ஜெயராஜ், மீனா, அம்சலட்சுமி, பா.ஜ., நிர்வாகி தெய்வம் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘தங்கராஜ் சிகிச்சையில் இருக்கும்போதே மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு போலீசார் மூலம் மிரட்டுகின்றனர். புகாரில் கூறியவர்களை கைது செய்யாமல் போஸ் தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,’ என கோரி உள்ளனர்.