மரக்கன்றுகளை பராமரித்து விடுமுறையை கழிக்கும் மாணவர்கள்
விடுமுறை நாட்களில் மாணவர்களிடம் நற்பண்பை வளர்க்க இயற்கை சார்ந்த ஒரு செயலை செய்ய துாண்ட வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் கவனம் திசை திரும்பாமல் ஒருமனதாக இருக்கும்.
இது கல்வி கற்கவும், பெரிதும் உதவும். தினந்தோறும் மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் மரக்கன்றுகள் நடுவது, பராமரிப்பது ஆகியவற்றை முக்கிய பணியாக ஏற்றுக் கொள்வதன் மூலம் தேவையற்ற விபரீத விளையாட்டுகளில் இருந்து தவிர்க்க உதவும்.
இது இவர்களது வாழ்க்கைக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைவதோடு மட்டுமல்லாது, இவர்களின் வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும்.
கூடலுார் ‘சோலைக்குள் கூடல்’ அமைப்பில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
400 வாரங்களுக்கு மேல் வாரந்தோறும் மரக்கன்றுகள் நடுவது பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்வதில் மாணவர்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். தற்போது பள்ளித் தேர்வு விடுமுறையால் தினந்தோறும் இப்பணிகளை செய்து வருகின்றனர்.
கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் வெளியில் சுற்றுவதை தவிர்த்தும் மாணவர்கள் இயற்கை சார்ந்த பணி செய்வதில் ஆர்வம் காட்டியும் வருவதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.