டில்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்; ஆபரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய ஆலோசனை
டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர்களிடம், ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை பற்றி, அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், நேற்று நடந்த தாக்குதல் குறித்து விளக்குவதற்காக, டில்லியில் இன்று (மே 08) அனைத்து கட்சி கூட்டத்தையும் மத்திய அரசு கூட்டியது.
டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு தரப்பில் இருந்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் பேசினர். இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல் குறித்த விபரங்களை, அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தலைவர்களின் சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.