கண்ணகி கோயிலை தமிழக அரசு எடுக்க வேண்டும் -பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் வலியுறுத்தல்
தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலின் முழுக் கட்டுப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கோயிலுக்கு சென்ற பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்தார்.
அவர் கூறும்போது:
இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் கண்ணகி கோயிலுக்கு வந்தனர்.
குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் வாகனங்களை அதிகப்படுத்தாததால் பல முறைகேடுகள் நடந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர்.
விழா ஏற்பாட்டில் தமிழக கேரள மாநிலங்களின் கூட்டு நடவடிக்கையில் பல குறைபாடு இருந்தது. பக்தர்களுக்கு வழங்கிய உணவு கெட்டுவிட்டது. இதனால் பலர் உணவு கிடைக்காமல் திரும்பினர்.
கோயிலை புனரமைத்து தமிழக வனப்பகுதி பளியன்குடி வழியாக பாதை ஏற்படுத்தி மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று கோயிலை வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கோயிலின் முழு கட்டுப்பாட்டையும் தமிழக அரசு எடுக்க வேண்டும், என்றார்.